Monday, October 29, 2007

இந்தியாவின் பொருளாதரத்தை உயர்த்தும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்தியாவின் பொருளாதரத்தை உயர்த்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சுமார் ஒரு கோடி பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2006-ல் மட்டும் 25.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணத்தை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார்கள். இது இந்தியாவிற்கு, வருமான வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம். இந்தியாவிற்கு வரும் நேரடி வெளிநாட்டு முதலீட்டைவிட 3 மடங்கு அதிகம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Thursday, August 2, 2007

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பணக்கார நாடான இந்தியா

சமீபத்தில் ஆசியா வளர்ச்சி வங்கி நடத்திய ஆய்வில் இந்தியாவும், சீனாவும் வாழ்க்கை தரத்தில் பின் தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆசியா வளர்ச்சி வங்கி 22 ஆசிய நாடுகளில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாழ்க்கை தரத்தில் இந்தியாவுக்கு 17-வது இடமும், சீனாவுக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 5 இடத்தை ஹாங்ஹாங், தைவான், சிங்கப்பூர், புருணை மற்றும் மக்கா ஆகிய நாடுகள் முறையே பிடித்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய பணக்கார நாடுகளாக இருந்ததாக அங்குஸ் மடிசன் The World Economy: A Millennial Perspective என்ற நுலில் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கிடையே 59% வர்த்தகம் நிலவியதாக அவர் கூறுகிறார். இதில் இந்தியாவின் பங்கு 33%, சீனாவின் பங்கு 26% எனவும் அந்நுலில் கூறப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்க்கை தரம் மற்ற நாடுகளை விட உயர்வாக இருந்ததாகவும் இந்தியா வளமான பணக்கார நாடு எனவும் கிரேக்க பயணி மெகாஸ்தீன்ஸ் மற்றும் சீனா பயணி யுவான் சுவாங் ஆகியோர்கள் குறிப்பிடுகின்றனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மக்கள் தொகை 7.5 கோடிக்கு குறைவு, சீனாவின் மக்கள் தொகை 6 கோடிக்கும் குறைவு, ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 30 லட்சம், உலக மக்கள் தொகை சுமார் 22 கோடி எனவும், உலக மக்கள் தொகையில் நான்கில் 3 பங்கினர் ஆசியாவில் வசித்தனர் எனவும் அவர் கணிக்கிறார்.

5000 ஆண்டுகளான சிந்துவெளி சமவெளி நாகரிகம், இந்தியாவின் பழமை, நாகரிகத்திற்கு சிறந்த ஆதாரம். சிந்து சமவெளியில் கோதுமை, பார்லி போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. உலகில் முதன் முதலாக பருத்தி இங்குதான் பயிரிடப்பட்டுள்ளது. மாடு., பூனை, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட்டுள்ளன. யானைகள் மரங்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளன. வரி வசூல் செய்யும் முறையும் நடப்பில் இருந்துள்ளது. அண்டை நாடுகள் அரபு வளைகுடா, மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா நாடுகளுடன் வர்த்தமும் நடைபெற்றிருக்கிறது.

ஆனால் சிந்துவெளி சமவெளி எப்படி அழிந்தது என்பதற்கு என இதுவரை உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. பருவ நிலை மாற்றம், வறட்சி, வெள்ளம், ஆரிய படையெடுப்பு ஆகியவற்றால் அழிந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 1998-ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது 'ஆரியர்கள் கைபர் கனவாய் வழியாக ஆடு மாடு மேய்ப்பவர்களாக இந்தியாவிற்கு நுழைந்தனர்' என்று இருந்த பள்ளி பாடத்தை மாற்றி, 'ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்கள்' என மாற்ற முனைந்தனர்.

Saturday, July 28, 2007

இந்தியாவில் மக்கள் மீது தொடரும் துப்பாக்கிச் சூடு ஜனநாயகம்.

ஜூலை 28, ஆந்திராவில் கம்பம் மாவட்டத்தில் மோனுகொண்டாவில், மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண், 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

சிபிஐ-எம் சார்பில் நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பந்த நடந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண், 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சிபிஐ-எம், ஆந்திரா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளது.

கடந்த மார்ச் 14-ம் தேதி சிபிஐ-எம் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் நந்திகிராமத்தில், டாடாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மக்களை சுட்டுக் கொல்வதில் அரசியல் கட்சிகளிடையே எந்த கொள்கை வேறுபாடும் கிடையாது.

செல் போனும் இந்தியாவும்

இந்தியா தொலை தொடர்பு ஆணையம் ஜூன் 25-ம் தேதி கீழ்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18.513 (ஜூன் 07 வரை) கோடி பேர். ஜூன் மாதம் மட்டும் 73.4 லட்சம் பேர் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய சந்தாதாரராகியுள்ளனர். மே மாதம் 65.7 லட்சம் சந்தாதாரராகியுள்ளனர். கடந்த சில மாதங்களாக லேண்ட்-லைன் தொலைபேசி சந்தாதாரர்கள் குறைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

கார்டனர் சர்வே, 2011-க்குள் 46.2 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவார்கள் என முன்னுரைத்துள்ளது. புதிய சந்தாதாரர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருவார்கள் எனவும், செல்போன் விலை ரூ 800 ஆக இருக்கும் எனவும் அது முன்னுரைத்துள்ளது.

Sunday, July 15, 2007

மூன்றாவது அணியின் தேர்தல் புறக்கணிப்பு-ஜனநாயக விரோதமா?

ஜூலை 19-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலை, மூன்றாவது அணி (UPNA) புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவிருக்கும் துணை குடியரசு தலைவர் தேர்தலில் தங்களது சொந்த வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய அரசுக்கான ஆதரவை இடது சாரி கட்சிகள் திரும்ப பெற்றால், அதனது வேட்பாளரை ஆதரிக்கவும் மூன்றாவது அணி முடிவு செய்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் NDA, UPA இரண்டையும் ஆதரிக்கப் போவதில்லை என ஜெயா அறிவித்துள்ளார்.
மூன்றாவது அணியில் ஜெயா, சந்திர பாபு, முலாயம் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர்கள் கைகோர்த்துள்ளார்கள்.

இப்படி தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் அல்ல என ஜெயா கூறியுள்ளார். ஆனால் ஜனநாயக விரோதம் என சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பரதன் போட்டியிடலாம் என சிபிஎம் தெரிவத்துள்ளது.


10,98,882 வாக்கு மதிப்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு மதிப்பு மூன்றாவது அணியிடம் உள்ளது.

Monday, July 2, 2007

சஞ்சய் தத்துக்கு தண்டனைக் கிடைக்குமா?

1993 –ல் நடந்த மும்பாய் குண்டு வெடிப்பு தொடர்பில் 4 முன்னால் போலீசஸ்காரர்களுக்கும் 6 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது பம்பாய் தடா நீதிமன்றம்.

அசோக் முனிஸ்வர், பல்ஷிகர், மாலி மற்றும் மகாதிக் ஆகியோருக்கு 4 வருடம் கடுங்காவலும், ரூ 25000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது பம்பாய் தடா நீதிமன்றம். குண்டு வெடிப்பு தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு தண்டனை அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

1993 மார்ச் 12-ம் தேதி பம்பாயில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்தனர்.
வெடிபொருட்கள் ஏற்றி வந்த லாரியை சரியாக சோதிக்காமல், அனுமதித்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 7 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் ஏற்றி வந்ததற்காக, நிழல் உலக தாதா அபு சலீமின் கூட்டாளி மற்றம் நடிகர் சஞ்சய் தத்துடன் குற்றம் சாட்டப்பட்டவனுமான மன்சூருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இவன் சஞ்சய் தத் இடத்திலிருந்து, அபு சலீம் உத்தரவின் பேரில் வெடிபொருட்களை லாரியில் ஏற்றி கொண்டு சென்றவன்.

சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஏகே 56 துப்பாக்கியை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கியை கொடுத்தது அபு சலீம். சஞ்சய் தத் ஏற்கனவே 18 மாதம் சிறையில் இருந்துருக்கிறார். பின் சஞ்சய் தத் குற்றவாளி ஆனால் தீவிரவாதி அல்ல என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
பணமும் அதிகாரமும் நன்கு விளையாண்டிருக்கிறது. இவரின் சகோதரி பிரியா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.

ஆமாம் சஞ்சய் தத்திற்கு தண்டனை என்னவாயிற்று. அப்படியே விட்டு விடுவீர்கள் என்பது நீங்கள் தீர்ப்பை இழுக்கும் போதே தெரிகிறதே.

போலீசஸ்காரர்கள்தான் இலிச்சவாயர்கள். ஏன் நீங்கள் நீதிபதியை கவனிக்க வில்லையா?

குடியரசு தலைவர் தேர்தல் எவ்வாறு நடக்கிறது

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்-2007

லோக்சபா உறுப்பினர்கள்-543
ராஜ்யசபா உறுப்பினர்கள்-233
பாராளுமன்ற உறுப்பினர்கள் 543+233=776

இந்தியா முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்கள்-4120

மொத்த வாக்காளர்கள்=776+4120=4896

தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள்-234
தமிழ்நாட்டின் மக்கள்தொகை -41199168 (1971-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் உள்ள வாக்குகள் = = /1000=176

தமிழ்நாட்டின் மொத்த வாக்குகள் = 234x176=41184


இதைப்போல இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் (டெல்லி, புதுச்சேரி) பிரதேசங்களின் மொத்த வாக்குகள் = 549474

ஒவ்வொரு பாராளுமன்றஉறுப்பினரின் வாக்கு மதிப்பு = 708

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின்
மொத்த வாக்கு மதிப்பு 776x708=549408


4896 வாக்காளர்களின்மொத்த வாக்கு மதிப்பு 549408+549474 = 10,98,882

இதில் ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? இன்னும் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே வாக்குகளின் மதிப்பு கணக்கிடப்படுகின்றன.

கடந்த தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 9,22,884

இப்போது நடப்பது 13-வது குடியரசு தலைவர் தேர்தல்.
முதலாவது குடியரசு தலைவர் 1952-ல் நடந்தது.
முதலாவது குடியரசு தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்.

கியூபா அதிபரை கொல்ல சிஐஏ சதி-அம்பலம்

அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏ. இது தன்னுடைய கடந்த 1950-1973 வரையிலான செயல்பாடுகளை ‘the family of Jewels’ என்ற பெயரில் தகவல் பெறும் உரிமை விதியின் (RTI) படி வெளியிட்டுள்ளது. 700 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பல தலைவர்களை கொலை செய்ய முயன்றது, சட்ட விரோதமாக ஆட்களை கடத்தியது, தன் சொந்த நாட்டிலேயே தொலைபேசி ஒட்டக் கேட்டது, ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டு தலைவரை கொல்ல திட்டமிட்ட சதி போன்ற செயல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டள்ளன.


பிடல் கேஸ்ட்ரோ ஜனவரி,1959-ல் புரட்சியின் மூலம் கியூபாவைக் கைப்பற்றினார். பிடல் கேஸ்ட்ரோ ஒரு பொதுவுடமைவாதி.(!?) இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட், 1960-ல், தன் சிஐஏ மூலம் அவரைக் கொல்ல சதி செய்தது.

சிஐஏ தனது முன்னால் ஏஜென்ட் ஒருவரை அழைத்து, ஜானி ரோஸாலி என்ற நிழல் உலக தாதாவை நியமித்து 6 விஷ மாத்திரை கொடுத்து கொல்ல சதி செய்தது. இதற்காக 150,000 யுஎஸ் டாலர் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சிஐஏ தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால் கியுபா அவற்றை முடியடித்தது. ‘கேஸ்ட்ரோவை கொல்ல பல முறை அமெரிக்கா முயன்றதாகவும், தற்போதைய அதிபர் புஷ்ஷூம் முயல்வதாகவும்’ கியூபா குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது ‘அமெரிக்கா முன்னால் அதிபர் ஜான் கென்னடியை 1963-ல் கொன்றது சிஐஏ மற்றும் கியுபாவிலிருந்து தப்பித்தவர்களுமே ஆவார்கள்’ என கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.

80 வயதான கேஸ்ட்ரோ, கடந்த ஒரு வருடமாக நோய்வாய்ப் பட்டுள்ளார். இவரது நோய்க்கு ஏன் சிஐஏ காரணமாக இருக்கக் கூடாது. இவர் மக்கள் மத்தியில் தோன்றி பல மாதங்கள் ஆகின்றன. தற்போது கியூபாவை அவரது தம்பி ராவுல் ஆட்சி செய்கிறார்.

இதெல்லாம் கடந்த கால தவறுகள், தாங்கள் இப்போது திருத்திக் கொண்டதாகவும் சிஐஏ கூறுகிறது. ஆனால் தற்போது இதைவிட மோசமான செயல்களில் சிஐஏ ஈடுபடுவதாகவும், தன்னைக் கொல்ல பலமுறை புஷ் உத்திரவிட்டிருப்பதாகவும் கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.